ஆளப்பிறந்தவன்
[ எனக்கும், கடலுக்கும் நடந்த உரையாடல் இது ]
நெடுநாளாய் வீழ்ந்து கிடந்த
நீர்ப்பிணம் ஒன்றின்
நீண்ட மணல் வெளியில்,
நெஞ்சம் சுமந்த
நினைவுகளை எல்லாம்,
நிழற்படமாய்
மனதுக்குள் சுவாசித்துக்
கொண்டிருந்தேன் !
மேகத்தில் துளியில்லை,
வானம் முழங்கவில்லை,
வெள்ளிக் கம்பிகள்
திரிக்கப்படவில்லை,
குளிர் காற்றும் என்னைக்
குடிக்கவில்லை, ஆனாலும்
நனைகிறேன் நான் !
திரும்பிப் பார்த்தேன்,
திகைத்தேன் !
என் உயரத்திற்கு
நீர் எழும்பி,
என்னை நனைத்துச்
சிரித்தபடி கேட்டது,
'என்னை யார் ?' - என்று
'அகிலம் ஆளப்பிறந்தவன்
நான்' எனக்கூறி,
என் அடி தொழுது
நிற்கும் நீ யார் ?
எனக் கேட்டேன் !
என்னிடம்
விடை எதிர்பார்த்திருந்த
நீர்ப்பிணம், என்
எதிர் வினாவினால்
எரிச்சலுற்றது !
நீர் வரிசைகளால்
என்னை அடித்தது !
இரைச்சலுடன் உயரே எழுந்து
என்மேல் மோதி வீழ்ந்தது !
வீழ்ச்சியைத் தன் பயத்தால் மறைத்து,
"நான் ஓர் நீர்ப்புரட்சி;
என் பெயர் கடல் " என்றது !
என் பார்வை
அதன் மேல் கூர்மையானதும்
தொடர்ந்து கூறியது,
"ஆழத்தை
அடிமைப்படுத்தியவன்
நான் !"
கோடான கோடி
உயிர்களைச்
சுமக்கிறவன் நான் !
என் பசிக்கு
பல உயிர்களை
பலி கொண்டவன் நான் !
வானவில்லையும்
வளைத்துப் போடும்
வல்லமை பெற்றவன் நான் !
அதிசயங்களின்
ஆச்சர்யம் நான் !
என்னுள் அள்ளிச் செல்ல
செல்வங்கள் ஏராளம் !
என்னைப் புரிந்து கொண்டால்
நான் ஓர் உளவு !
புரிய மறுத்தால்
அவர்கள் என் கனவு !
எனச் சொல்லிக் கொண்டே
நீரை வாரி இறைத்தது
மீண்டும் ஓர் ஏலனச்சிரிப்போடு !
இப்போது கேட்டது
மீண்டும் 'நான் யார்' என்று
ஆணவத்தில் ஆர்ப்பரித்துத்
துள்ளும் கடலைக் கண்டு
சொல்லத் துவங்கினேன்
நான் யாரென்று !
படைத்தவன் பார்த்து ரசிக்க
பல உயிர்களை இரட்சிக்கப்
பிறந்தவன் நான் !
என்னை எனக்குள் சென்று
நான் யார் என்று, என்னால்
தெரிந்து கொள்ளும்
ஆற்றல் படைத்தவன் நான் !
ஆழத்தை அடிமைப்படுதியவனே !
உன் ஆழம் அளக்க
அளவுகோல் கண்டவன் நான் !
உன் பசிக்கு, பல
உயிர்களை படைப்பவன் நான் !
உன்னுள் இறங்கி
உன்னைக் கொள்ளையடிக்கும்
திறன் பெற்றவன் நான் !
இரகசியங்களை மொத்தமாக
வைத்துள்ள உனக்குள்
இறங்கும் நான், எந்த
இரகசியமும் இல்லாதவன்,
படைத்த பரம்பொருள்
அனுபவிக்கத் தெரிந்தவன் நான்,
பார்க்கும் இடமெல்லாம், என்
முத்திரைப் பதிக்கத்
தெரிந்தவன் நான்,
இருந்த இடத்தில்
இருந்து நகர
முயற்சி மட்டும்
செய்பவன் நீ !
எங்கும்
எளிதில் நகரத்
தெரிந்தவன் நான் !
"என் பெயர் மனிதன்"
எனச் சொல்லி
முடிக்கும் வேளையில்,
ஆர்ப்பாட்டம் தவிர்த்து,
ஆணவம் தவிர்த்து,
அமைதியாய் என்
பாதம் கழுவிச் சென்றது
கடல் !
Comments
Post a Comment