Skip to main content

ஜீவன் 

[ பெண் மனம் ஒன்று தனது வாழ்க்கையின் ஓட்டங்களை தானே சொல்வது மாதிரியான வடிவம் தான் இந்த ஜீவன் ]

நெஞ்சில் களிப்போடு,
கையில் இனிப்போடு,
விழிகளில் ஆசையோடு,
காத்திருந்த நெஞ்சம் 
கல்லாகிப் போனது,
பெண் பிள்ளையாக 
நான் பிறந்ததால் !

காற்றடித்தால் 
காணாமற் போகும் 
களிமண் குடிசையில்,
கல்வியின் வாசம் 
நுழைவதற்குக்
காசுக்கு  எங்கே போவது ?

சில வண்ணச் சீருடையிட்டு,
சின்னப் பாதங்களில் உறையிட்டு,
சின்னஞ்சிறிய மலர்கள் 
சிங்காரமாய் பள்ளி செல்கையில்  
சிந்திய கண்ணீரைத் தொட்டு 
சிரித்தபடி செல்லும் என் மனம் !

சில்லெனும் குளிரோடையில் 
சித்திரமாய் தாமரை மொட்டு 
சிரித்து நின்றால்தான், கதிரவனும் 
சிறப்பாய்த் தன் 
செங்கதிர்களை வீசுவான், ஆம் !
வளர்ந்து வரும் - என் 
வயதுகளில் நான் 
வளர்பிறையாகி 
வாட்டும் பௌர்ணமியாகினேன் !

கல்விச் சாலைகளுக்கும்,
கடமைகளைச் செய்வதற்கும்,
கடந்து செல்லும் 
காளையர்களின் 
கண்ணாடி பட்டுக் 
களைத்துப் போனது, இந்தக் 
காய்ந்த உடல் ! என் 
மனம்  பார்க்கவில்லை யாரும், என் 
குணம் காணவில்லை யாரும்,
கண்டது என் பருவம் தான் !
கணத்தது இந்த இதயம் தான் !

பட்டுச் சேலையிட்டு 
பாரிஜாத மாலையிட்டு 
மூணு பவுன் நகையிட்டு 
முச்சந்தியில் நிறுத்தப்பட்டேன், என் 
ஆசைகளுக்கு வேலியிட்டு 
ஆயுள் முழுக்கத் தாலியிட்டு 
ஆதரிக்க வரும் 
அன்புக் கணவனின் கைப்பிடிக்க !

கணவன் என்றும் 
கயவனும் இல்லை 
காரியக்காரனும்  இல்லை 
குடிசைவீட்டுக் குடிமகனாகவே 
குடியிருந்தான் குறைவில்லாமல் !

சொல்லிப் பார்த்தேன் நிலைமையை,
தள்ளிப் பார்த்தேன் வேலைக்கு,
அல்லிப் பூவாயிருந்த விழிகளில்,
ஆறுகளையும் விட்டுப் பார்த்தேன் !
எரி சாம்பலில் விழுந்தவன் 
எழுந்திருக்கவே யில்லை !

இரும்பு பாலமிட்டு 
இருப்புப் பாதைபோல 
இருந்த என் வாழ்வு 
இருண்டு போனது ! ஆம் 
மலிவான விலையில் 
மதுவருந்தி, உயிரை 
மாய்த்துக் கொண்டான், என் 
மணவாளன் !

நரை வளரும் காலத்தில் 
மறைந்த நாயகனின் நினைவில் 
நிறைகளைக் காணாத மனம்,
குறைகளில் நிரம்பி ஆயுளைக் 
கரைத்துக் கொண்டு இருக்கிறது.

பெண் ஒரு ஜீவநதியா ?
ஜீவன் உள்ள மட்டும் 
ஜீவிக்கிற மனதைத் தாருங்கள், - இல்லையேல் 
ஜீவனுக்கு விடுப்பு கொடுங்கள்  - அந்த 
ஜீவன் நிச்சயம் 
ஜீவிக்கும் இன்னொரு பிறவியில் !







Comments

Popular posts from this blog

நீதான்னு ... காஞ்சிபுரம் கருவாச்சி,           பார்த்து ரொம்ப நாளாச்சி, கோபப்படும் குட்டச்சி,           கோவிச்சிப் போனா என்னாச்சி, நானும் இனி உங்கட்சி,           வேணாமடி அழுகாச்சி, கண்ண உருட்டி காமிச்சி - நீ           சொன்ன காதல் என்னாச்சி, நல்ல காலம் வந்தாச்சி,           நாலு காசும் பார்த்தாச்சி, பந்தக் காலும் போட்டாச்சி,           பத்துப் பேரும் வந்தாச்சி, ஊர் மயங்கி நின்னுருச்சி,           மணப் பொண்ணா உன்ன பாத்திருச்சி, கையி ரெண்டும் கோர்த்தாச்சி,           கழுத்துல தாலி ஏறிடுச்சி, படுக்கையும் விரிச்சாச்சி,           பன்னீரும் தெளிச்சாச்சி, அதுக்குள்ள ! ...
அப்பா நன்றி அப்பா ! எப்போதாவது  யாரிடமாவது  அறிமுகப்படுத்தும் போது மட்டும்  என்னோடு  பேசுவதற்கு ... நன்றி அப்பா ! முதன் முதலாய்  பிறந்ததால்  மூத்தவள் என்று  முடிசூட்டி, என்னை  மூலையில்  முடக்கி வைத்ததற்கு ... நன்றி அப்பா ! இளையவள் பிறந்த பின்பு  இல்லத்தில் ஏற்றம்  என்று  என் தங்கைக்கு மட்டும்  சிவப்புக் கம்பளம்  விரித்ததற்கு ... நன்றி அப்பா ! முழுமையான பெண்ணாக  நான் மலரும் போது  முனகிய படியே என்  கனவுகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்ததற்கு ... ஆனால் அப்பா ! எனக்குள் சில  ஆதங்கம் ... சரியான நேரத்தில்  முறையாக எனக்கு  போலியோ  போடப்பட்டிருந்தால் ... கைகளை ஊன்றி  உடலை இழுத்து  இழுத்து  இடம்பெயரும் , நிலை எனக்கு  இல்லாமல் போயிருந்தால் ... என்  ஊனம் கண்டு  உள்ளத்தில் எரிந்து  உங்கள் உதடுகள், என்  உதிரம் உறிஞ்சும் வார்த்தைகள்  உதிர்க்காமல்  ...
இன்னொரு அறிமுகம் அட ! எங்கேயோ பார்த்த முகம்  இவனென்று  எண்ணத் தோன்றுகிறதா ? எப்போதோ  சுவைத்த இதயத்தின்  இனிமை  இப்போது உன்  நினைவில் வருகின்றதா ? உன்  பத்தினிச் சிரிப்பில்  பற்றி எரிந்து, சத்தியமாய்ச்  சாம்பலாகிப் போன, என்  இதயத் துகள்களை  நுகர முடிகிறதா ? கள்ளிப்பால் குடித்த குழந்தை போல், உன்  காதலிப்பால்  கரைந்த, என்  உயிரின் கதறல்  கேட்கிறதா ? நான் தானடி! நீ சிதறிய  பார்வையில் சிக்கியவர்களில் சீனியர் நான் ! என் வாழ்க்கை உன்னோடு என்று, நீ உளறிய வார்த்தைகளில் உருகியவன் நான் ! உன் ஞாபகங்களில் ஞானியானவன் நான் ! பொய்களைக் கடந்து மெய்களை மறந்து எதையும் நம்ப மறுப்பவன் நான் ! முன்னாளில் உன் காதலனாய், இந்நாளில், என் முகவரி தொலைத்தவனாய் ... அட ! எங்கேயோ பார்த்த முகம் இவனென்று  இப்போது தெரிகிறதா ?