Skip to main content

ஜீவன் 

[ பெண் மனம் ஒன்று தனது வாழ்க்கையின் ஓட்டங்களை தானே சொல்வது மாதிரியான வடிவம் தான் இந்த ஜீவன் ]

நெஞ்சில் களிப்போடு,
கையில் இனிப்போடு,
விழிகளில் ஆசையோடு,
காத்திருந்த நெஞ்சம் 
கல்லாகிப் போனது,
பெண் பிள்ளையாக 
நான் பிறந்ததால் !

காற்றடித்தால் 
காணாமற் போகும் 
களிமண் குடிசையில்,
கல்வியின் வாசம் 
நுழைவதற்குக்
காசுக்கு  எங்கே போவது ?

சில வண்ணச் சீருடையிட்டு,
சின்னப் பாதங்களில் உறையிட்டு,
சின்னஞ்சிறிய மலர்கள் 
சிங்காரமாய் பள்ளி செல்கையில்  
சிந்திய கண்ணீரைத் தொட்டு 
சிரித்தபடி செல்லும் என் மனம் !

சில்லெனும் குளிரோடையில் 
சித்திரமாய் தாமரை மொட்டு 
சிரித்து நின்றால்தான், கதிரவனும் 
சிறப்பாய்த் தன் 
செங்கதிர்களை வீசுவான், ஆம் !
வளர்ந்து வரும் - என் 
வயதுகளில் நான் 
வளர்பிறையாகி 
வாட்டும் பௌர்ணமியாகினேன் !

கல்விச் சாலைகளுக்கும்,
கடமைகளைச் செய்வதற்கும்,
கடந்து செல்லும் 
காளையர்களின் 
கண்ணாடி பட்டுக் 
களைத்துப் போனது, இந்தக் 
காய்ந்த உடல் ! என் 
மனம்  பார்க்கவில்லை யாரும், என் 
குணம் காணவில்லை யாரும்,
கண்டது என் பருவம் தான் !
கணத்தது இந்த இதயம் தான் !

பட்டுச் சேலையிட்டு 
பாரிஜாத மாலையிட்டு 
மூணு பவுன் நகையிட்டு 
முச்சந்தியில் நிறுத்தப்பட்டேன், என் 
ஆசைகளுக்கு வேலியிட்டு 
ஆயுள் முழுக்கத் தாலியிட்டு 
ஆதரிக்க வரும் 
அன்புக் கணவனின் கைப்பிடிக்க !

கணவன் என்றும் 
கயவனும் இல்லை 
காரியக்காரனும்  இல்லை 
குடிசைவீட்டுக் குடிமகனாகவே 
குடியிருந்தான் குறைவில்லாமல் !

சொல்லிப் பார்த்தேன் நிலைமையை,
தள்ளிப் பார்த்தேன் வேலைக்கு,
அல்லிப் பூவாயிருந்த விழிகளில்,
ஆறுகளையும் விட்டுப் பார்த்தேன் !
எரி சாம்பலில் விழுந்தவன் 
எழுந்திருக்கவே யில்லை !

இரும்பு பாலமிட்டு 
இருப்புப் பாதைபோல 
இருந்த என் வாழ்வு 
இருண்டு போனது ! ஆம் 
மலிவான விலையில் 
மதுவருந்தி, உயிரை 
மாய்த்துக் கொண்டான், என் 
மணவாளன் !

நரை வளரும் காலத்தில் 
மறைந்த நாயகனின் நினைவில் 
நிறைகளைக் காணாத மனம்,
குறைகளில் நிரம்பி ஆயுளைக் 
கரைத்துக் கொண்டு இருக்கிறது.

பெண் ஒரு ஜீவநதியா ?
ஜீவன் உள்ள மட்டும் 
ஜீவிக்கிற மனதைத் தாருங்கள், - இல்லையேல் 
ஜீவனுக்கு விடுப்பு கொடுங்கள்  - அந்த 
ஜீவன் நிச்சயம் 
ஜீவிக்கும் இன்னொரு பிறவியில் !







Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !