சிரிக்கிறேன்
கொஞ்ச நாள்
பழக்கம்
கொண்டு வந்த
வழக்கம்
எதிரே பார்த்தால்
யதார்த்தமாய்
சிரிப்போமென்று !
எத்தனையோ முறை
உன் எதிரில் நான்
உன்னைக்
கடக்கும் பொழுது
சிரித்தாய் ,
நானும் சிரித்திருக்கிறேன் !
கை அசைத்தாய்,
நானும்
கை அசைத்திருக்கிறேன் !
'நில்' என்று
சைகை செய்வாய்
நானும்
நின்றிருக்கிறேன் !
'பேசு' என்று
கண்களால் கெஞ்சுவாய் !
நானும்
கொலையுண்டிருக்கிறேன் !
"என் இறுதிவரை
என் கண்களுக்குள்
நீ தான்
நிறைந்திருக்க வேண்டும் "
என்றாய் !
பயந்தேன்,
பதறினேன்,
பதில் சொல்லி
அவகாசம் கேட்டேன் !
உன் பூமுகம் கண்ணீர்ப்
பொய்கையில்
மூழ்குவது
சகிக்காமல்
கிளம்பினேன் !
மறுநாள்
இதோ தூரத்திலே
என்னைப்
பார்த்து விட்டாய் !
என்னுள் நீ
உதிர்த்த
உணர்வுகளுக்கு எல்லாம்
"உயிர் கொடு"
என்று
உன்னிடம்
கேட்க வந்தேன் !
ஆனால் உன்
கண்களில் எனைப்
பார்த்ததும்
ஒளி விடும்
பிரகாசம் இல்லை !
முகத்தில் எந்தச்
சலனமும் இல்லை !
கூப்பிடலாமா என
நினைக்கும் போது
கண்டும் காணாமல்
உன் கண்கள்
உன் முகத்தை
வேறு பக்கம்
திருப்பியதை எண்ணிச்
சிரித்தேன் !
கானலாய் இருந்த
உணர்வுகளுக்கெல்லாம்
நீ தான் காரணம்
என நான்
நினைத்ததை எண்ணிச்
சிரிக்கிறேன் ! சிரிக்கிறேன் !
நீ ஊட்டிய
உணர்வுகள் எல்லாம்
உண்மை என்று
உயிர் வளர்த்த இந்த
உடலை எண்ணிச்
சிரிக்கிறேன் !
இந்தப் பாதையில், என்
இதயம் பயணிப்பது
இதுவே இறுதிமுறை என
முடிவு கட்டிச் சிரிக்கிறேன் !
Comments
Post a Comment