தியாகி
தன் உடலுக்குள் உடலாக வளர்த்து
தன்னிகரற்ற உலகுக்கு ஒளியாய் அளித்து
தன் ரத்தத்தையே பாலாகப் பிரித்து ,
தான் உண்டாலும் உண்ணாமற் போனாலும்,
தன் பிள்ளைக்கென்று ஒரு பிடி எடுத்து,
நல்ல குணங்களையே வளர்த்து
தன் மடியை தலையணையாய் வைத்து,
தன் மூலம் ஓர் உயர்ந்த நிலையைப் பார்த்து,
தனியே தவிக்கும் தாயும் ஓர்
தியாகி தானே !
இளமையில் இணைந்து
இன்னலோ, இன்பமோ
இறுதிவரை தொடர்ந்து,
இல்லறத்தில் நிலைத்து,
இனிய தலைமுறை வளர்த்து,
ஈன்ற பெற்றோரை துறந்து,
சேர்ந்தக் குடும்பத்தைச் செழிக்கச்
செய்யும் மனைவியும்
தியாகி தானே !
தன் மனதை மட்டும் பாராமல்
பெண் மனதை பெரிதாக மதித்து,
உடல் அழகு பாராமல்
ஊனமுற்ற இளம்பெண்களை - வாழ்வில்
ஊன்று கோலாய்த் தாங்கும்
உன்னத இளைஞர்களும்
தியாகிகள் தானே !
வீட்டுக் கதவைத் தட்டி
ஓட்டுக் கேட்டு வந்தவனிடம்
நாக்குறுதி இல்லாதவனின்
வாக்குறுதிகளை நம்பி
முத்திரையிட்ட பின்னர்
நித்திரை கெட்டுத் தவிக்கும்
ஜனங்களும் ஒருவிதத்தில்
தியாகிகள் தானே !
விளைவுகளையும் எதிர்பாராமல்,
விருதுகளையும் எதிர்பாராமல்,
வித்தியாசமான சாதனைகளை
விடியல்தோறும் படைக்கும்
விஞ்ஞானிகளும் தியாகிகள் தானே !
தினந்தோறும் தியாகிகள்
திரைமறைவில் இருக்கின்றனர் !
தென்றலைப் பூட்ட பொருளுண்டா ?
மனம் மறைக்கும் வழியுண்டா ?
தியாகம் திருடத்தான் ஆளுண்டா ?
Comments
Post a Comment