மாசானவள்
ஈழத்தில் பிறந்த
ஈனப் பிறவி நான் !
தமிழர் பிரச்சனையில்
தாள அறுக்கப்பட்டு
தவிக்கும் குழந்தையோடு
அகதிப் போர்வைக்குள்
அழுத்தப்பட்டு இந்தச்
சகதிக்குள் தள்ளப் பட்டவள் !
வேளைக்கு ஒரு
சேலை அணியவோ,
கழுத்து நிறைய
கண் கூசும் நகைகள்
அணியவோ,
உறவுகளைத் துறந்த
ஆடம்பர வாழ்வில்
ஆனந்தம் காணவோ,
இதற்குள் விழவில்லை நான் !
அகதிப் பொறுப்பாளனின்
அகம் பாவத்தினால்,
பருந்து பறித்துச் சென்ற
கோழி குஞ்சு போல்,
பறிக்கப்பட்ட என் குழந்தை,
பயமுறுத்தப் பட்டது, அது
கொன்று விடப்படுமென்று !
வாழ்வு எனக்கு
எவ்வளவு தூரமோ
அவ்வளவு தூரம் தான்
என் மரணத்திற்கும்
என்று நினைத்துக் கொண்டேன்
பல முறை முயற்சித்தும்
முடிவில் மரணம்
எனக்கு மறுக்கப்பட்ட ஒன்று என்று !
கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
காக்கப் படுகிறது என்
குழந்தையென்று
அவன் செய்த சத்தியங்களில்
என் சரித்திரம் மாறுகிறது !
மாத வாடகையானேன்,
நாளுக்கொரு விலை பேசப்பட்டேன்
மணிக் கணக்கில்
பணம் பண்ண
பயன்படுத்தப்பட்டேன் !
என் உடலில்
உழைத்தவர்கள்
என் உணர்வுகளை
உமிழ்ந்தார்கள் !
பலவித வழக்கில்
பல நாட்கள்
சிறை செல்ல
பெருத்த வாய்ப்புக்
கிடைக்கும் போதெல்லாம்,
ஓய்வெடுக்கலாம் என்று
நிம்மதி பெருமூச்சு விடுவேன் !
ஆனால்
அவிழ்க்கப்பட்ட என்
ஆடைகளைக் கொண்டு,
சட்டம் மூடப்பட்டிருக்கும் !
என்
உழைப்பு தொடர்ந்து
கொண்டிருக்கும்,
இலவசமாகவே !
உடல்வலி
ஊறு செய்யும்போது,
உற்சாகப் பானத்தால்
நிரப்பப்படுவேன் !
பகல் இரவாய்
பண்ணிய தவறுகளுக்கு,
பால்வினை நோய்
பரிசாய் வந்தது !
மாத்திரைகளை விழுங்கி
மயங்கிய நிலையில்
மரண வாசலில்
மிதந்து கொண்டிருக்கிறேன் !
மங்கையர் குலத்தில்
நான் ஒரு
மாசு என்று
எண்ணிக் கொண்டிருக்கும் போதே,
விபரீதமான
விபசார வாழ்வு
விடை பெறுகிறது
என்னிடமிருந்து !
Comments
Post a Comment