Skip to main content

மாசானவள்

ஈழத்தில் பிறந்த 
ஈனப் பிறவி நான் !

தமிழர் பிரச்சனையில்
தாள அறுக்கப்பட்டு 
தவிக்கும் குழந்தையோடு 
அகதிப் போர்வைக்குள் 
அழுத்தப்பட்டு இந்தச் 
சகதிக்குள் தள்ளப் பட்டவள் !

வேளைக்கு ஒரு 
சேலை அணியவோ,
கழுத்து நிறைய 
கண் கூசும் நகைகள் 
அணியவோ,
உறவுகளைத் துறந்த 
ஆடம்பர வாழ்வில் 
ஆனந்தம் காணவோ,
இதற்குள் விழவில்லை நான் !

அகதிப் பொறுப்பாளனின் 
அகம் பாவத்தினால்,
பருந்து  பறித்துச் சென்ற 
கோழி குஞ்சு போல்,
பறிக்கப்பட்ட என் குழந்தை,
பயமுறுத்தப் பட்டது, அது 
கொன்று விடப்படுமென்று !

வாழ்வு எனக்கு 
எவ்வளவு தூரமோ 
அவ்வளவு தூரம் தான் 
என் மரணத்திற்கும் 
என்று நினைத்துக் கொண்டேன் 
பல முறை முயற்சித்தும் 
முடிவில் மரணம் 
எனக்கு மறுக்கப்பட்ட ஒன்று என்று !

கண்ணுக்கு எட்டாத தூரத்தில் 
காக்கப் படுகிறது என் 
குழந்தையென்று
அவன் செய்த சத்தியங்களில் 
என் சரித்திரம் மாறுகிறது !

மாத வாடகையானேன்,
நாளுக்கொரு விலை பேசப்பட்டேன் 
மணிக் கணக்கில் 
பணம் பண்ண 
பயன்படுத்தப்பட்டேன் !

என் உடலில் 
உழைத்தவர்கள் 
என் உணர்வுகளை 
உமிழ்ந்தார்கள் !

பலவித வழக்கில் 
பல  நாட்கள்
சிறை செல்ல 
பெருத்த வாய்ப்புக் 
கிடைக்கும் போதெல்லாம்,
ஓய்வெடுக்கலாம் என்று 
நிம்மதி பெருமூச்சு விடுவேன் !

ஆனால் 
அவிழ்க்கப்பட்ட என் 
ஆடைகளைக் கொண்டு,
சட்டம் மூடப்பட்டிருக்கும் !

என் 
உழைப்பு தொடர்ந்து 
கொண்டிருக்கும்,
இலவசமாகவே !

உடல்வலி 
ஊறு செய்யும்போது,
உற்சாகப் பானத்தால் 
நிரப்பப்படுவேன் !

பகல் இரவாய் 
பண்ணிய தவறுகளுக்கு,
பால்வினை நோய் 
பரிசாய் வந்தது !

மாத்திரைகளை விழுங்கி 
மயங்கிய நிலையில் 
மரண வாசலில் 
மிதந்து கொண்டிருக்கிறேன் !

மங்கையர் குலத்தில்
நான் ஒரு 
மாசு என்று 
எண்ணிக் கொண்டிருக்கும் போதே,
விபரீதமான 
விபசார வாழ்வு 
விடை பெறுகிறது 
என்னிடமிருந்து !


Comments

Popular posts from this blog

நீதான்னு ... காஞ்சிபுரம் கருவாச்சி,           பார்த்து ரொம்ப நாளாச்சி, கோபப்படும் குட்டச்சி,           கோவிச்சிப் போனா என்னாச்சி, நானும் இனி உங்கட்சி,           வேணாமடி அழுகாச்சி, கண்ண உருட்டி காமிச்சி - நீ           சொன்ன காதல் என்னாச்சி, நல்ல காலம் வந்தாச்சி,           நாலு காசும் பார்த்தாச்சி, பந்தக் காலும் போட்டாச்சி,           பத்துப் பேரும் வந்தாச்சி, ஊர் மயங்கி நின்னுருச்சி,           மணப் பொண்ணா உன்ன பாத்திருச்சி, கையி ரெண்டும் கோர்த்தாச்சி,           கழுத்துல தாலி ஏறிடுச்சி, படுக்கையும் விரிச்சாச்சி,           பன்னீரும் தெளிச்சாச்சி, அதுக்குள்ள ! ...
அப்பா நன்றி அப்பா ! எப்போதாவது  யாரிடமாவது  அறிமுகப்படுத்தும் போது மட்டும்  என்னோடு  பேசுவதற்கு ... நன்றி அப்பா ! முதன் முதலாய்  பிறந்ததால்  மூத்தவள் என்று  முடிசூட்டி, என்னை  மூலையில்  முடக்கி வைத்ததற்கு ... நன்றி அப்பா ! இளையவள் பிறந்த பின்பு  இல்லத்தில் ஏற்றம்  என்று  என் தங்கைக்கு மட்டும்  சிவப்புக் கம்பளம்  விரித்ததற்கு ... நன்றி அப்பா ! முழுமையான பெண்ணாக  நான் மலரும் போது  முனகிய படியே என்  கனவுகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்ததற்கு ... ஆனால் அப்பா ! எனக்குள் சில  ஆதங்கம் ... சரியான நேரத்தில்  முறையாக எனக்கு  போலியோ  போடப்பட்டிருந்தால் ... கைகளை ஊன்றி  உடலை இழுத்து  இழுத்து  இடம்பெயரும் , நிலை எனக்கு  இல்லாமல் போயிருந்தால் ... என்  ஊனம் கண்டு  உள்ளத்தில் எரிந்து  உங்கள் உதடுகள், என்  உதிரம் உறிஞ்சும் வார்த்தைகள்  உதிர்க்காமல்  ...
இன்னொரு அறிமுகம் அட ! எங்கேயோ பார்த்த முகம்  இவனென்று  எண்ணத் தோன்றுகிறதா ? எப்போதோ  சுவைத்த இதயத்தின்  இனிமை  இப்போது உன்  நினைவில் வருகின்றதா ? உன்  பத்தினிச் சிரிப்பில்  பற்றி எரிந்து, சத்தியமாய்ச்  சாம்பலாகிப் போன, என்  இதயத் துகள்களை  நுகர முடிகிறதா ? கள்ளிப்பால் குடித்த குழந்தை போல், உன்  காதலிப்பால்  கரைந்த, என்  உயிரின் கதறல்  கேட்கிறதா ? நான் தானடி! நீ சிதறிய  பார்வையில் சிக்கியவர்களில் சீனியர் நான் ! என் வாழ்க்கை உன்னோடு என்று, நீ உளறிய வார்த்தைகளில் உருகியவன் நான் ! உன் ஞாபகங்களில் ஞானியானவன் நான் ! பொய்களைக் கடந்து மெய்களை மறந்து எதையும் நம்ப மறுப்பவன் நான் ! முன்னாளில் உன் காதலனாய், இந்நாளில், என் முகவரி தொலைத்தவனாய் ... அட ! எங்கேயோ பார்த்த முகம் இவனென்று  இப்போது தெரிகிறதா ?